பாக்கு நீரிணை

paakku-niriani.jpgஇராமர் பாலம் என்பது கட்டுக் கதை
- மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்)

அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொறுங்கும் கற்பனைக் கதைகள்

ஆற்று முகத்துவாரத்தில் நீர்வரத்து குறைந்த காலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு, ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது?

ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியியல் அடிப்படையிலும் கூறினால் மட்டுமே மக்களுக்குப் புரியும்.

‘சேது’ என்பது வடமொழிச் சொல் என்று இதுவரை கூறிவருகின்றனர். அது முற்றிலும் தவறு. சங்க இலக்கியப் பாடல்களில் சேறு, மணல் ஆகியவை சேரும் இடத்தைச் சேது என்றும் அந்த மண்ணை ஆண்ட மன்னர்களையும் மக்களையும் சேர்வை என்றும் குறிப்பிடுகின்றன. எனவே, சேது என்பது தமிழ்ச் சொல்லே.

இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இயற்கையாக மணல் சேருகின்ற தன்மையை அங்குள்ள மக்கள் சேர்வது என்று அழைத்து, பின்னர் சேது என்று அழைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு மணல்கள் சேர்வது, நீரும் நிலமும் கலக்கின்ற எல்லா இடங்களிலும் நிகழ்கின்ற இயல்பு. ஆற்றுநீரில் வண்டலாக, சேறாக, மண்டியாக வருகின்ற மணல், நீரின் வேகத்தோடு ஓடிச் சென்றாலும் வேகம் குறைந்த ஓரங்களில் திடல்களாக அங்கு உருவாகும்.

நீர்வரத்துக் குறைந்த காலங்களில் உள்வளைவுகளிலும் சரிவுகளிலும் அருவியாகச் சொரியும் இடங்களின் முன்பு கடலோடு கலக்கின்ற நிலையிலும் மணல் சேர்ந்து திரண்டு, திரளாகி, திடலாகி, காட்சி தரும்.

ஆறுகளில் நீர்வரத்துக் குறைந்த காலங்களில் வெளி வளைவுகளில் நீரோட, உள் வளைவுகளில் மணல், சேறு திரண்டு திடல்களாகும். அதேபோல நீர்வரத்துக் குறைந்த காலங்களில் ஆற்று முகத்துவாரத்தில் மணல் சேர்ந்து திடலாகி இருக்கும்.

ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்தத் திடல்கள் கரைந்துவிடும். முகத்துவாரத்தில் வெளிப்பக்கத்தில் அகலமாகவும் நிலப்பகுதியில் கூம்பாகவும் இத்திடல் இருக்கும். மேடுகளுக்கும் செங்குத்தான பள்ளங்களுக்கும் உள்ள எல்லைகளில் இத்தகைய திடல்கள் அமைவது இயற்கை. இது ஒரு புவியியல் தன்மை, நீரியல் தன்மை மற்றும் சேற்றியல்தன்மை. இத்தகைய திடல் ஆற்று முகத்துவாரங்களிலும் தரவைக் கடல்களிலும் உருவாகின்றன. ஆழம் குறைந்த கடலே தரவைக் கடல். ஆழம் அதிகமான கடல் நெடுங்கடல்.

நெடுங்கடலின் நடுவே நிலங்களை இணைக்கும் மேடை தரவைக் கடலாக அமைகின்ற புவியியல் தன்மையை உலகெங்கும் காணலாம். நீரிணை என இவற்றைப் பெயரிடுவர்.

சைபீரியா முனையையும் அலஸ்கா முனையையும் இணைப்பது பெரிங் நீரிணை.

தென் பாப்புவாவையும் வட அவுஸ்திரேலியாவையும் இணைப்பது டொரஸ் நீரிணை.

சுலவகாசி தீவையும் போணியோ தீவையும் இணைப்பது மக்காசா நீரிணை.

அரபுக்கடலின் நீட்டமான மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைப்பது பாக்கு நீரிணை.

நில இடுக்குகளைப் போல நீரிணைகளும் உலகெங்கும் உள்ளன. இந்த நீரிணை மேடை விளிம்புகளில் எல்லைகளில் நெடுங்கடலைச் சந்திக்கும் இடத்தில் மணல் திடல்கள் அமைவது இயல்பு. அது பெரிங், டொரஸ், மக்காசா நீரிணையாக இருந்தால் என்ன? பாக்கு நீரிணையாக இருந்தால் என்ன? ஆழமற்ற மேடை, ஆழமான கடலைச் சந்திக்கும் விளிம்பில் திடல்கள் அமையும்.

ஆறு கடலில் கலக்கும் போதும் சரி, கடல் மேல்மட்ட நீரோட்டம் தரவைக் கடலிலிருந்து ஆழ்கடலில் விழும்போதும் சரி கிளைகள் விட்டுப் பாயும்.

கங்கை, பிரம்மபுத்திரை வங்கக் கடலில் கலக்கும் சுந்தரவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் மணல் திடல்களைச் சுற்றி வளைந்து வளைந்து செல்கின்றன. அக்கடலிலும் கண்ட மேடைகளிலும் நகரும் தீவுகளே இருக்கின்றன.

அதேபோல தரவைக் கடலின் மேல்மட்ட நீரோட்டம் விளிம்பில் வழிந்து ஆழ்கடலில் கலக்கும்போது நகரும் மணல் திடல்கள் அமைகின்றன.

பாக்கு நீரிணையின் தெற்கு எல்லையான தலைமன்னார், தனுஷ்கோடி விளிம்பில் நூற்றுக்கணக்கான நகரும் மணல் திடல்கள் அமைந்திருக்கின்றன.

இந்த நகரும் திடல் ஒரு நாளைக்கு ஓர் இடத்தில் இருக்கும். மறுநாள் வேறொரு இடத்தில் இருக்கும். நீரோட்டம், சேற்று வெள்ளம், சுழிநீரின் வண்டற் கலக்கல் அளவு போன்ற பல்வேறு காரணங்களினால் முக்கோண வடிவான இத்திடல்களே நகரும் திடல்கள் ஆகின்றன.

இதேபோல, பாக்கு நீரிணையின் வட விளிம்பான 45 கி.மீ. நீளமுள்ள கோடியக்கரை மாதகல்நீள் படுக்கையில் நகரும் திடல்கள் அமைந்திருக்கின்றன. அங்கேயும் தரவைக் கடல்விளிம்புக்கு அப்பால் சடுகையான செங்குத்தான ஆழம் வங்காள விரிகுடாவில் உண்டு.

வங்காள விரிகுடாவும் அரபிக் கடலும் எதிர் எதிர் பருவ நிலைகளைக் கொண்ட பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய கடல்கள். இந்தியப் பெருங்கடலின் நீட்டங்களான இந்த இரு கடல்களில் எதிர் எதிர் பருவக் காற்றுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூர்மையடையும்.

கார்த்திகை, மார்கழி, தையில் வாடைக் காற்று வீசும். வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் வலசை நீரோட்டம் ஏற்படும். ஏறத்தாழ 3,000 மீற்றர் வரை ஆழமுள்ள கடல்களில் இந்த நீரோட்டத்தின் உந்துதல் நடு ஆழத்தில் கடுமையாக இருக்கும். மேற்புறத்திலும் அடி ஆழத்திலும் நீரோட்ட உந்துதல் குறைவாக இருக்கும்.

கங்கையும் பிரம்மபுத்திரையும் ஐராவதியும் மகாநதியும் அடித்துத் தள்ளும் மலைச்சாரல், சேறும் மரமுறிவுகளும் குழைகளும் வங்கக் கடலில் கலந்து இந்த வலசை நீரோட்டத்துடன் இணைந்து சோழமண்டலக் கரை வழியாக மேற்பரப்பில் விரைந்து ஊர்ந்து பாக்கு நீரிணையை அடைந்து, இலங்கையின் மேற்குக் கரை வழியாக இந்துப் பெருங்கடலை நோக்கி வேகமாக மூன்று மாத காலங்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும்.

மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் வலசை நீரோட்டத்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து அடங்கிவிடும். வங்கக் கடலானது குளம் போலவும் ஏரி போலவும் மாறிவிடும். வைகாசி பிறந்தாலே எதிர் பருவமான இடசை நீரோட்டத்திற்கு அரபிக்கடலும் – வங்காள விரிகுடாவும் தயாராகி விடும். தென்றல் காற்று வீசும் காலம் தொடங்கும்.

ஆனி, ஆடி மாதங்களில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் பிரியும் சோமாலி நீரோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு அரபிக் கடலில் கிளம்பும் இடசை நீரோட்டம் மன்னார் வளைகுடாவுக்குப் புகுந்து பாக்கு நீரிணை மேடைமேல் ஏறி கோடிக்கரை மாதகல் நீள்படுகையும் தாண்டிக் குதித்து வங்கக்கடலில் புகும்.

இலங்கையைச் சுற்றியும் அந்த நீரோட்டத்தின் பெரும் பகுதி நீர், வங்கக் கடலைக் கலக்கி, சோழமண்டலக் கரை வழியாக மிதந்து ஊர்ந்து மியன்மாரைத் தொடும்.

இந்த எதிரெதிர் நீரோட்டங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழுமையடைந்து அரபிக் கடலையும் வங்கக் கடலையும் கலக்கி வண்டலையும் சேற்றையும் பாக்கு நீரிணையின் மேற் பரப்பும் நீரோட்டத்துடன் கொணர்ந்து சேறாக்கித் தங்க வைப்பதால், பாக்கு நீரிணையின் முதல் நிலை உற்பத்தி பெருகுகிறது. அவற்றை நம்பி சிறுமீன்கள் வளர, அவற்றை நம்பி பெருமீன்கள் வளர, சங்குகளும் முத்துகளும் சிப்பிகளும் சிங்கி இறால்களும் பிறவும் பெருமளவில் வளர்கின்றன.

பாக்கு நீரிணை தரவைக் கடலில் பரந்துபட்ட மீன் உற்பத்திக்கு இந்த எதிரெதிர் நீரோட்டம் மூலமாக வரும் சேறும் வண்டலும்தான் வளம் ஊட்டுகின்றன.

இந்த எதிரெதிர் நீரோட்டத்தினால் வரக்கூடிய சேறும் வண்டலும் பாக்கு நீரிணையின் வட, தென் விளிம்புகளில் படிந்து சேர்ந்து திரண்டு நகரும் மணல் திடல்கள் ஆகின்றன. இந்தத் திடல்களுள் தெற்கில் உள்ளதை இராமர் பாலம் என்று சொல்கிறார்கள்.

இயற்கையாக நடைபெறும் நிகழ்வினால் ஏற்படும் திட்டுகளை அல்லது திடல்களை மனிதன் கட்டினான் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

இயற்கையாக ஏற்பட்ட மணல் திடல்களாகவே இருந்தாலும், அந்த திடல்களை தகர்ப்பதால் ‘சுனாமி’ மாதிரியான பேராபத்துகள் வரும்போது, பாக்கு நீரிணைக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.

இரண்டு மீற்றர் நீளமுள்ள ஒரு சுவரில் 2 செ.மீற்றர் விட்ட வட்டமுள்ள ஒரு துளையால் அந்த இரண்டு மீற்றர் சுவருக்கு பாதிப்பு வருமா? இந்த இரண்டு செ.மீ. விட்ட வட்டமுள்ள துளை இருந்தால் தானே மின்சார கம்பியினை உட்செலுத்தி மின் இணைப்பு ஏற்படுத்த முடியும். அதோபோலத்தான் 31 கி. மீற்றர் நீளமுள்ள தலைமன்னார், தனுஷ்கோடி சேதுதிடல்கள். அதிலே 300 மீற்றர் அகலமான அகழ்வுப் பணி நடைபெற இருக்கிறது.

மொத்தமாகப் பார்க்கும் போது ஒரு விழுக்காடு அளவுதான். இதே மாதிரி எத்தனையோ இடைவெளிகள். அந்த 31 கி.மீற்றர் சேது திடல்களில் உள்ளன. அதனால் பாதிப்பு என்பது துளியும் இருக்காது. 2 மீட்டர் நீள சுவரில் 2 செ.மீ. துளை ஏற்படுத்துவதால் எந்தப் பாதிப்பும் வராது.

ஏதோ முழுத் தொடரை சேது திடல்கள் இடிப்பது போல் அல்லவா கூச்சலிடுகிறார்கள். 31 கி.மீட்டர். அதில் பாதியளவு இலங்கை எல்லைக்குள் இருக்கின்றது. அதில் ஒரு விழுக்காடு இடைவெளி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதில் எங்கிருந்து பாக்கு நீரிணைக்குப் பாதிப்பு வரப் போகிறது? கண்டிப்பாக வராது.

அடுத்ததாக, இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள். அகழ்வுப் பணியில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. அதனால் அங்கே இருக்கும் கற்பாறைகள், பவளப் பாறைகள் சிதறிப் போய்விடும். தோரியம், மக்னீசியம் போன்ற கனிமவளங்கள் அழிந்து போய் விடும் என்று சொல்கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக மண் அகழ்கின்ற பணியைச் செய்யும் இடத்தில் மணலே பெருமளவில் இருக்கிறது. 30 அல்லது 40 மீற்றருக்குக் கீழே சுண்ணக் கற்களுடைய புவியியல் அமைப்பு கொண்டவை என்று இந்தியா – இலங்கை ஆழ்கடல் ஆராய்ச்சிக் கூடங்கள் உறுதி செய்கின்றன. அதனால் அங்கே பாறைகள் உடையும் என்ற நிலையே இல்லை.

இன்னொன்றையும் சொல்கிறார்கள். விண்வெளிக் கலத்திலிருந்து இந்தியா கடல்வெளியை நாசா எடுத்த ஒளிப்படத்தில் தனுஷ்கோடி கரையிலிருந்து தலைமன்னார் வரை நீளும் திட்டுகள் மனிதனால் கட்டப்பட்ட பாலம் இருப்பதாகவும் அது இராமர் கட்டிய பாலம் என்று அந்த நாசா அமைப்பு கூறியுள்ளதாகவும் கூச்சலிடுகின்றனர்.

இவர்கள் ஏன் நாசாவிடம் போக வேண்டும். இஸ்ரோ அமைப்பு படம் பிடித்திருக்கின்றனர். அவர்கள் இப்படி ஒரு கருத்தை கூறவில்லையே. ஆழம் குறைந்த கடலில் மணல் திட்டு தொடர்ந்து இருப்பதையே விண்வெளிப் படம் காட்டும். அதற்கு மேல் அதற்கு விளக்கம் தருபவர் புவியியல் கடலியலயாளரோ, நாசாவோ, இஸ்ரோவோ இல்லை.

சேது கால்வாய் அமைவதன் மூலமாக இந்திய நாட்டிற்குப் பயன் கிடைக்கும். குறிப்பாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு வளம் சேரும்.

152 ஆண்டுகளுக்கு முன்பு சூயஸ் கால்வாய் அமைந்த பொழுது இன்றைய திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்ற நேரடியாகக் கூறினார்களா?

90 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. அங்கே அதற்குப் பக்கத்தில் அதே அளவில் இன்னொரு கால்வாயை மக்கள் விரும்புகின்றனர். காரணம் புதிய கால்வாய் உருவாக்குவதன் மூலம் அந்நிய நாட்டுச் செலாவணியை பெருக்கிக்கொள்ள முடிகிறதாம். அண்டை நாட்டில் சுமுகமான வணிக உறவுகளை ஏற்படுத்த முடிகிறதாம். அதனால், அங்குள்ள மக்கள் இதே போன்ற கால்வாய்த் திட்டத்தை விரும்புகின்றனர்.

ஆனால், 145 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி வந்திருக்கிறோம். இன்னும் காலம் கடத்லாமா?

**தரவை கடல் – ஆழம் குறைந்த கடல்

மீன்னொன்று தரை கண்டு

மீன்னொன்று தரை கண்டு


மீன்னொன்று தரை கண்டு

மீன்னொன்று நீர் எழுந்து,
மானிடம் பார்த்து, நிலையறிந்து.
தானென்றறிந்து, அழகு தன் உலகு என்று.
நீர் கொண்டு வாழ்ந்தது.

தரை உயிர்ரென்று, அழகென்று நீர் மூழ்கி,
அசந்து அழகைக்கண்டு
மூச்சின்றி தன் நிலையறிந்து .
தரையெழுந்து தன்வழி சென்று
பொறாமை கொண்டது

சுமை

சுமை




சுமை

ஈருயிர் உயிர்இன்றி,
ஓருயிர் உருவாக வழிசெய்து.

சுமையின்றி , தாங்கி சுமை
மயில் என்று, இறை தாங்கி.

உயிர் தந்த சுமைதாங்கி
நிலையின்றி
அச்சானி உடையுண்டு,
மடிந்தது
மானிடம்

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ


பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும்
போகுமோ
போராடும் அன்பில்
அட ஏன் தான் காயமோகண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதேகவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனதுபடைத்து பார்ப்பதை அறியா
தேகுளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவுநிஜத்தில் உலகத்தில் உடையாதே… உடையாதே..காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானேஇதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்கேட்கவில்லை நானே
விலகும்போது நெருங்கும் காதல்அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டிவிருப்பம்போல் அது வலி தருமோ…..வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.
பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ————————————–elephant upon a flowerwould the flower bear the painwould the veena stringwhile falling on firewould the thoughts just go away if I say sowhy all these wounds in the struggle of lovethese eyes write poems of tears ,lines of tears then fill my facewithering leaves add weight to the branchesthose leaves forgetting all, floats with the windyou have a heart that break things openwhat would it know about making thingsmoon breaks on the reflecting pondbut never in reality though….never.there is no other sickness like lovehow true it is.inspite of this ancient wisdom ye all sharedi did not see it coming.love, that follows when I recedewould it shy away if I get closer ,then chain me to the dungeon andtorture me as it would wish.when the minds travels on different pathsto love is sinuntil it comes together …there no one to accompany,its the curse of the eonselephant upon a flowerwould the flower bear the painwould the veena stringwhile falling on fire

3 தாலி தமிழரதா? ஒரு பார்வை

தாலி – 3
சரி, மஞ்சள் என்ற கருத்துப் புரிகிறது, மஞ்சட்பொருள் திருமணத்தில் எப்பொழுது வந்தது?

முன்னே சொன்னது போல், இந்தக் காலத்தில் நாம் காணும் தாலிகட்டுப் பழக்கம் தமிழருள் எப்போது ஏற்பட்டது என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. (கிடைத்திருக்கும் சான்றுகளைப் பார்த்தால், பெரும்பாலும் சங்கம் மருவிய காலத்தில் ஏற்பட்டிருக்க முடியும். அது பற்றிக் கீழே பார்ப்போம்.)

சிலம்பில் வரும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே “மங்கல வாழ்த்து” என்ற சொற்றொடரால் “திருமண வாழ்த்தை”த்தான் குறிக்கிறது. குறிப்பாக, மங்கலம் என்ற சொல் இங்கு திருமணத்தையே குறிக்கிறது. சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”

என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது; அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது” என்று உணர்த்துகிறார்.

[19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதே! தவிரவும் திருமணங்கள் பெரும்பாலும் பூரணையும் (பௌர்ணமி), சகட நாள்காட்டும் (உரோகிணி நட்சத்திரம்) கூடிய இரவில் தான் நடந்தன. (நிலாவெளிச்சத்தில் வெண்குடைகள் எழுவது அலங்காரமாய் தோற்றமளிக்கும்.]

அது என்ன, மங்கல அணி என்ற சொல்லாட்சி? அது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிய மிஞ்சிக் கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்ற குரல் எழுந்து மேளம் அதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலி கட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர்கள் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி அகலுள் எழத் தான் செய்கிறது.

எனவே, சிலம்பில் மங்கல அணி என்ற சொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. அப்புறம் தாலி என்ற சொல் வரவில்லையே என்று சிலர் கேட்கக் கூடும். “தாலி என்ற சொல்லால் குறித்தால் தானா? அதை வேறு சொல் கொண்டு குறிக்கக் கூடாதா, என்ன?” என்பதே நம் மறுமொழி. தாலிப் பழக்கம் கி.பி. 100/150 அளவில் இருந்திருக்கிறது என்று சிலம்பை வைத்து அறுதியிட்டு உரைக்க முடியும். அச்சில் உய்வு (printed salvation) தேடும் வறட்டுக்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்த உண்மைப் பொருளை நன்றாய் உய்த்துணர்வார்கள். [அதே பொழுது, சிலம்பில் குறிக்கப்படும் மேட்டுக்குடித் திருமணம் தமிழர் வழக்கத்தையும், ஆரியர் வழக்கத்தையும் கலந்து விரவியே குறிக்கிறது என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டும்.]

அடுத்த மங்கல அணி என்பது மனையறம் படுத்த காதையிலும் பேசப் படுவதைச் சொல்லலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். இப்படித் தனிக் குடித்தனம் வைத்தலை “வேறு வைத்தல்” என்றும் சொல்லுவார்கள். இளங்கோவடிகளும் கூட “வேறு வைத்தல்” என்ற சொல்லாட்சியையே சிலம்பில் ஆளுகிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் “மனையறம் படுத்தல்” என்று சொல்லுவார்கள்.

மனையறம் படுத்த காதையில் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே” என்றெல்லாம் கோவலன் சொல்லுவதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த உரை வேறு வைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

“மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுபவர்கள், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?”

என்று கேட்கிறான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசி தான் தனித்து வாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையே குறிக்கிறது. இந்தக் காலத்தில் சுமங்கலி என்ற இருபிறப்பிச் சொல்லால் இது போன்ற வாழ்வரசிப் பெண்ணைக் குறிப்பார்கள். சிவ மங்கலி என்னும் நல்ல தமிழ்க்கூட்டுச் சொல் தான் திரிந்து சுமங்கலி என்றாகி வடமொழியாய்ப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. இன்றும் இறைவியின் முன்னிலையில் பெற்ற குங்குமத்தைத் தாலியின் மேல் இட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழ்ப் பெண்களுக்கு உண்டு. குங்குமம் பொற் தாலியில் ஒட்டாது; ஆனால் மஞ்சள் பொருளில் நன்றாய் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அது சிவமங்கலியாய் ஆவது வியப்பு ஒன்றும் இல்லை.

இன்னும் பார்த்தால், மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 வரிகளிலும் பயில்கிறது. இனி நடுகற் காதையில் வேண்மாளைக் குறிக்கும் போது வரும் வரிகளைப் (சிலம்பு 28:51) பார்க்கலாம்.

தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணம் காணிய வருவழி

வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = wedding; இங்கே வதுவுற்ற என்பது wedded என்ற வினைச்சொல்லைக் குறிக்கிறது. மங்கல மடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத் தான் குறிக்கிறது. “நிலவு எழுந்த பொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காண வரும் வழியில்” என்ற பொருளை இங்கு கொள்ள வேண்டும்.

ஆகக் கணவன் இறந்த பின்னும் கூடக் கண்ணகி மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப் பெறுகிறாள். இன்றைக்கும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவி கோயில் என்றே சொல்லப் பெறுகிறது. “கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு” என்ற முட்டாட்தன மூதிகங்களைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப் பெறுவது முற்போக்காளர்கள் சிந்தனையில் தைக்க வேண்டும். மங்கல வாழ்வு என்பது ஒரு முழுமை பெற்ற வாழ்வு, அவ்வளவு தான். பொதுவாய் வேறு வைத்துத் தனிக் குடித்தனம் நடத்தும் எந்த ஒரு பெண்ணுக்கும் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. அப்படி ஆளுமை கிடைத்த எவளும் மங்கல மடந்தை, வாழ்வரசி என்றே அழைக்கப் படுவாள். (இன்றைக்கு முட்டாள் தனமாகக் கணவனை இழந்தோரை வாழ்வரசி அல்லாதவள் என்று கூறினாலும்) பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே. (இந்தச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் பயிலும்.) நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதை மனையறம் படுத்த காதையின் முடிப்பு வரிகளில்,

“வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்”

என்று சொல்லி யாண்டு சில கழிந்ததை உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163) மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப் பெறுவான்.

எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

இன்றைக்கும் பெருமானரில் இரண்டு வகையை இனம் காட்டுவார்கள். ஒருவர் மந்திரங்களிலும், வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் (கோயில் பற்றிய புரிசைகளில்) தேர்ந்தவர். முதல்வகை ஆள் தான் இன்றைக்கும் திருமணங்களின் ஊடே வருகின்ற பார்ப்பனர் ஆவார். இரண்டாம் வகையைச் சேர்ந்த தந்திரி, ஓரோவழி முதல் வகையாருக்கு உதவி செய்யும் தோதாய் வரக்கூடும். இருந்தாலும் முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல் வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கல காரியங்களை நடத்தி வைக்கின்ற பார்ப்பனன் என்றே சொல்லப் படுகிறான். அதாவது “கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்”.

மங்கல அணி என்ற தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்>மங்கல்யம்>மாங்கல்யம் என்று சுருங்கிப் போய் இருபிறப்பியாய் மாறியது ஒன்றும் வியப்பான செயல் அல்ல.

{காட்டாக, “ஜல சமுத்ரம்” என்ற இருபிறப்பிச் சொல் இன்று “சமுத்ரம்” என்று சுருங்கச் சொல்லப் பட்டு பொருள் புரிந்து கொள்ளப் படுகிறது. சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகமாக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.

இனி, ஜலம் என்னும் சொல்லும் தமிழ் மூலம் காட்டுவது தான். சலசல என்று ஓசை எழுப்பும் நீர் சலம்>ஜலம் என்ற பெயரைக் கொள்ளும். (இது போன்ற ஓசைவழிச் சொற்கள் பல மொழிக் குடும்பங்களிலும் காணக் கிடைக்கும். ஒரு குடும்பம் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.) ஜலம் என்னும் சொல்லும் சமுத்ரம் என்னும் சொல்லும் சேர்ந்து வடமொழியில் ஜலசமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கும். நாளாவட்டத்தில் புழக்கத்தின் காரணமாய் ஜல என்பது தொகுக்கப்பட்டு சமுத்ரம் என்பதே தனித்துக் கடலைக் குறித்தது. ஜல சமுத்ரம் போல ஜன சமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனியுங்கள். [சமுத்ரத்தில் உள்ள தீவு சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு.]}

« பழைய வரவுகள்